
'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை
நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படவேண்டுமோ, அவை
ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப்
பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன்
செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத்
தவிர்ந்து நடக்கவேண்டும்.
அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள்
வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை
மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான்
ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமலான்
மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட
வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம்
மீளவேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.
ஆனால்
எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, அந்த
உன்னத இலட்சியத்தை நாம் மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள்
என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில்
எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து
நடந்துக்கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்துக் கொள்ளவேண்டும்.
நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன்
புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ்
தெளிவுபடுத்துகின்றது.
ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி
வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். கோள், புறம், பொய்,
புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து
விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய
நடவடிக்கைளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே
மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்)
அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை
என்றால் ரமலான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப்
பாழ்படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக்
கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமலான் மாதங்கள்
நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை.
எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்)அவர்களின்
வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள்
வெறும் பூஜ்யமாகவே இருக்கும். எனவே நபி(ஸல்) அவர்களிள் எச்சரிக்கைக்கு நாம்
முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் பாழ்படுத்திவிடாமல்
பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும்
அல்லாஹ் பொருந்திக்கொள்ளமாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த
அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான்.
இறை திருப்தியை மட்டும் நாடி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க
வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம்
வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:
'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன்
இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)
விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்'.
(அல்குர்ஆன் 2:183)
இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக்
சுட்டிக்காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட
வேண்டும்.
நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின்
காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும்
பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும்
வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ்
ஒவ்வொரு கணமும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நம்பிக்கை நம்
உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில்
சாப்பிடுவதில்லை.
இதேபோல் ரமலான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக்
கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமலானில் விலக்கப்பட்ட
காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட
காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்துக்கொண்டதை சிந்திக்க வேண்டும்.
நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை.
கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத்
தீண்டுவதில்லை.
இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம். இந்த
ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி(ஸல்)அவர்களும் விளக்கியுள்ளார்கள். 'பசித்திருப்பதல்ல நோன்பின்
நோக்கம்' என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி
எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு
படுத்தியுள்ளார்கள்.
பொய் பேசுகிறவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்பெறுவதுடன், அவன்
செல்லுமிடம் நரகமாகவும் இருக்கும். இன்று நம்மவர்கள் மத்தியில் பொய்
பேசுவது மலிந்துள்ளது. எவ்வளவோ பேர் மார்க்கத்தின் பெயரால், எத்தனையோ பொய்
சொல்கிறார்கள். நம்மில் அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் தப்பில்லை
என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான் சர்வ சாதாரணமாக, சளைக்காமல் பொய் சொல்லும்
கலையில் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றார்கள். பொய் சொல்வதைப் பெரிய
திறமையாகவும் கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக் காலத்தில் எப்படி
வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும் நிலை! பொய் சொன்னால்
மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமும் சில முஸ்லிம்களிடம் எடுபட்டுப்
போய்விட்டது.
'உண்மையைக் கடைப்பிடியுங்கள். உண்மை
நன்மையின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே தொடர்ந்து
இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன் உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான்.
பொய்யைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம்
வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்யுரைத்து அதில் மூழ்கியிருப்பானாயின்
அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்படுகின்றான்' என அல்லாஹ்வின் தூதர்
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி); நூல்: புகாரி, முஸ்லிம்
எனவே இந்த
நோன்பின் மூலம் பயிற்சிபெற்று, பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுத்துக்
கொள்ளவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை, வெறும் பட்டினிதான்
கிடந்துள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும்.குறிப்பாக ரமலான்
காலங்களில் மார்க்கம் அதன் சிறப்பு என்ற பெயரால் பொய் பேசுவது கண்டிப்பாக
நிறுத்தப்படவேண்டும். தமக்குத் தோன்றியதையெல்லாம் மார்க்கம் என்று பேசும்
மடமை நிலை மாற வேண்டும்.
அதிலும் குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் தமது காலத்தையும், நேரத்தையும்
வீணடித்துவிடாது இந்த ரமலானை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தனக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள முஃமீனாக வாழ்ந்து அல்லாஹ்வின்
மார்க்கத்தை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த விதத்தில்
நிலைநாட்டவேண்டும்.
எனவே நோன்பு நம்மிடம் எதிர்பார்க்கும் இலட்சியத்தை அடைந்து கொள்ள ஆவண செய்வோமாக!
'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன்
இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)
விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்'.
(அல்குர்ஆன் 2:183)
புனிதமிகு ரமலான் நம்மிடம் இறையச்சத்தை வேண்டி நிற்கிறது. அடுத்த ரமலானை நாம் அடைவோமா இல்லையா என்பதை யாரும் அறியோம்.எனவே இந்த ரமலானை சிறந்த முறையில் பயன்படுத்தி, நல்லமல்கள் செய்து நல்லவர்களாக வாழ பயிற்சி பெறுவோமாக....!
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!